Abstract
உலகில் மரங்கள் இல்லையென்றால் உயிரினங்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவற்றின் பெருமை உயர்ந்தது. ஒரு மரம் நாள் ஒன்றிற்குச் சராசரியாகப் பத்து மனிதர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான பிரானவாயுவைக் கொடுக்கின்றது. மரம் பொய்ப்பின் மழை பொய்க்கும். மழை பொய்ப்பின் மற்ற உயிர்கள் பொய்க்கும். மனிதனின் பிறப்பின் போது தொட்டிலாய், வதுவையின்போது பந்தலாய, இனவிருத்தியின்போது கட்டிலாய், முதுமையின்போது ஊன்றுகோளாய், இறப்பின்போது பல்லக்காய், இறுதிச் சடங்கின்போது விறகாய் இப்படி வாழ்வின் பிறப்புமுதல் இறப்புவரை மரங்களின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாய் இருந்துவருகிறது. பல்வேறு மரங்கள் பல்வேறு வகைகளில் பயனளிக்கின்றன. பனைமரத்தின் பயன்பாடு பலவாகையால் “தமிழரும் பனைமரமும்” என்னும் தலைப்பில் இக்கட்டுரை அமைகிறது.
பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் பன்நெடுகாலந்தொட்டு இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. போராஸ் (Borassus flabellifex)என்ற தாவரவியல் பெயர்கொண்டு ஒவ்வொரு பாகமும் பயன்பட்டு வந்ததால் மக்கள் இதனைக் கேட்டதெல்லாம் கொடுக்கும் “கற்பகத்தரு” என்று போற்றியுள்ளனர்.
பனை முதன்முதலில் எவ்விடத்தில் தோன்றியது என்பதற்குக் குறிப்புகள் இல்லை. ஆனால் “380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் பனை தோன்றியது என்று அறிவியல் கூறுகிறது. அக்காலப் பகுதியை ‘டிவேனியன் காலகட்டம் (Devonion Period - 417 million)என்று கூறுவர். இது பலிஓசொய்க் (Palezoic) ஊழிக்காலமாகும். அக்காலத்தில் தோன்றிய முதல் பனைமரம் 35 அடி உயரமாக இருந்ததாகவும் அறிகிறோம்” (நுனாவிலூர் கா.விஜயரெத்தினம் ப.9).
“புறக்கா ழனவே புல்லெனப்படுமே” (தொல்.பொருள்.630)
என்று தொல்காப்பிய மரபியல், இக்கால அறிவியல் அடிப்படையில் பனை புல்லினத்தைச் சார்ந்த தாவரமாகும்.
பனை பெரும்பாளும் பயிரிடப்பெறுவதில்லை, இயற்கையா, தானாக வளர்ந்து பெருகுகின்றது. இதன் கன்று, பனங்குட்டி, வடலி என்று அழைக்கப்பெறுகிறது. பனை 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைவதுடன் 30 மீட்டர் உயரம்வரை வளர்கிறது. மற்ற தாவரங்கள்போல் அல்லாமல் கடுமையான வறட்சியையும் தாங்கி வளரும் தன்மைவாய்ந்தது. இதற்கு நீர் பாய்ச்சுவதில்லை. பனைமரம் கிளைகளற்று ஒற்றைத்தடி மரமாக வளர்கின்றது என்றாலும் சில இடங்களில் அறிதாகக் கிளைகளுடன் கூடிய மரங்கள் காணப்படுகின்றன. பனைகளில் ஆண், பெண் என்று இரு இனங்களும், நாட்டுப்பனை (Coripha flabalifer/ Palmyar) சீதளப்பனை என்ற கூந்தற்பனை (Coripha Umbra Calibra) லந்தர்பனை (Coripha Utan)எண்ணைப்பனை (Oil palm tree)என்று நான்கு வகைகளும் உண்டு.
பண்டைக்காலம் தொட்டு இலக்கியங்கள், இலக்கணங்களில் பனை பற்றிய செய்திகள் விரவிக் காணப்பெறுகின்றன. தொல்காப்பியம்- 57, 88, 572, 630. நற்றினை - 392, 303. குறுந்தொகை - 182, 293, 372. ஐங்குறுநூறு 114. பதிற்றுப்பத்து (இரண்டாம் பத்து) - 18. பரிபாடல் - 10. கலித்தொகை (முல்லைக்கலி) - 4-7, 15-1, 17-8, 83, 129, 138, 139:8-10, 141, 142. அகநானூறு - 113, 120, 148, 365. புறநானூறு - 45, 58, 61. சிறுபானாற்றுப்படை - 27. பெரும்பானாற்றுப்படை - 360. பட்டினப்பாலை - 16-20, 89. மணிமேகலை - 17, 29. சீவகசிந்தாமணி - 2053, 2227, 2526, 2763. கம்பராமாயணம் - 4605. திருக்குறள் - 93 (10 குறள்). பழமொழி நானூறு - 187, 270, 280. முதுமொழிக்காஞ்சி - 7-3. பெரியதிருமடல் - 78. சிறிய திருமடல் - 2708, 2709, 2710. முத்தொல்லாயிரம் - 77 என்று இலக்கியங்கள் பனை பற்றி பல்வேறு பதிவுகள் கொண்டு விளங்குகின்றன.
உலகில் பனைமரங்கள் தமிழர் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் காணப்பெறுகின்றன. மேற்கு ஆப்பிரிக்கா, இலங்கை, இந்தொனெசியா, மடஸ்கார், மியான்மார், கம்பூசியா, தாய்லாந்து என பல்வேறு நாடுகளில் இம்மரங்கள் காணப்பெறுகின்றன. ஆசிய நாடுகளில் அதிக அளவில் இவை காணப்பெறுவதோடு இந்தியாவில் கேரளம், கோவா, மும்பை தொடங்கி குசராத் வரையுள்ள பிரதேசங்கள், தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை உட்பட சென்னைவரையுள்ள பகுதிகளில் பனைமரங்கள் காணப்பெறுகின்றன. குறிப்பாகத் தமிழகத்தின் தென்மாவட்டங்களின் ஊர்பெயர்கள் பனங்குளம், பனம்பட்டி, மேற்பனைக்காடு, பனைத்தோப்பு, பனஞ்சேரி, பனைமரத்துப்பட்டி, மேல்பனையூர், பனையப்பட்டி, திருப்பனங்குடி, பனைக்குளம், பனங்குடி, பனையபுரம், பனங்காட்டூர், திருப்பனந்தாள், திருப்பனையூர், திருப்பனங்காடு என பனைமரத்தினை அடிப்படையாகக் கொண்டு இருப்பதனைப் பார்க்கும்பொழுது இம்மரத்திற்கும் தமிழருக்கும் இணைபிரியா உறவு இருந்ததனை அறியமுடிகிறது. மேலும் புதுக்கோட்டைக்கு அருகில் 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பொற்பனைக் கோட்டை இடிந்த நிலையில் காணப்பெறுகிறது.
இந்தியாவில் உள்ள ஏறத்தாழ 8.59 கோடி பனைகளில் 5.10 கோடி மரங்கள் தமிழத்தில் உள்ளதாகக் கூறப்பெறுகிறது. குறிப்பாக இம்மரங்கள் 45 டிகிரி வட அச்சரேகையிலிருந்து 45 டிகிரி தென் அச்சரேகை வரையுள்ள வெப்பமண்டலப் பிரதேசங்களில் வளர்கின்றன. இப்பிரதேசம் பனை வட்டம் (palam belt )என்று அழைக்கப்பெறுகிறது.
ஒரு பனையிலிருந்து ஏறத்தாழ ஆண்டு ஒன்றிற்குப் பதணீர் 180 லிட்டர், பனை வெள்ளம் 25 கிலோ, பனஞ்சீனி 16 கிலோ, தும்பு 11 கிலோ,ஈக்கி 2.25 கிலோ, விறகு 10 கிலோ, ஓலை 10 கிலோ, நார் 20 கிலோ கிடைக்கின்றன.
பனையிலிருந்து கிடைக்கக்கூடிய உணவுப்பொருட்களாவன நுங்கு, பனம்பழம், பூரண், பனாட்டு (பபனை + அட்டு) பங்காய்ப்பனியாரம், கள், பனஞ்சாராயம், வினாகிரி, கிழங்கு, பதநீர், பனங்கட்டி = கருப்புட்டி = பனைவெல்லம், ஒலியல்கூழ், புழுக்கொடியல், முதிர்ந்த ஓலை (விலங்குணவு), குருத்து ஆகியவையாகும்.
பனம்பழத்திலிருந்து கிடைக்கப்பெறும் பீட்டா கரோட்டின் என்ற ஊட்டச்சத்து வைட்டமின் ‘A’ தன்மைகொண்டது. கண்பார்வைக்குச் சிறந்தது. பனம்பழம் செரிமானத்தன்மையை அதிகரிக்கிறது.
குழந்தைபெற்ற தாய்மார்களின் உடலை குளிர்விப்பதற்காக பனைவெல்லம் கொடுக்கப்படுகிறது. இது சளி, இருமல் போன்ற வியாதிகளைக் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது.
பெண் முதல்முறை பூப்படையும்போது அவளுடைய இடுப்பு எழும்பு மற்றும் உடல் உறுதியடையச்செய்வதற்காக குச்சுக்குள் இருக்கும் 16 அல்லது 22 நாட்கள் பனங்கருப்பட்டி, உளுந்து, நல்லெண்ணெய், நாட்டுக்கோழி முட்டை ஆகியவற்றைச் சேர்த்து உண்ணக் கொடுத்தல் சடங்கு முறையாக உள்ளது.
புதிதாகத் திருமணமான மணமகனுக்கு பாலியல் தூண்டலையும் வீரியத்தையும் அதிகரிப்பதற்கு பனங்கருப்பட்டியுடன் கேழ்வறகு, பொட்டுக்கடலை ஆகியவற்றை உரலில் இட்டு உண்ணக் கொடுக்கும் வழக்கம் தமிழர் வாழ்வியல் முறையாக உள்ளது.
பனையிலிருந்து ஓலை, பெட்டி, நீற்றுப்பெட்டி, கடகம், பணம்பாய், வீடுகளுக்கான கூரை, வேலி, விசிறி, பனையோலைக்காலனி, கிணற்றுப்பட்டை, எரு, துலா ஆகியன புழங்குபொருட்களாகக் கிடைக்கின்றன. மேலும் கங்கு மட்டை, தும்புப் பொருட்கள், விறகு, கட்டிடங்களுக்குத் தேவையான தளவாடங்கள், பனம் சவர்க்காரம் போன்றவையும் பனையிலிருந்து பெறப்படுகின்றன.
மதுரையில் பனைபொருள் அங்காடி கூட்டுறவுச் சங்கம் அமைக்கப்பெற்று பனை சார்ந்த பொருட்கள் கொள்முதல் மற்றும் விற்பனை செய்யப்பெறுகிறது.
பனைகளில் பல்வேறு வகைகள் உள்ளன என்றாலும் தென்னிந்தியாவில் வளரும் நாட்டுப்பனைகளின் ஓலைகளிலிருந்தே ஏடுகள் செய்யப்பட்டன. அதிக முற்றலும், அதிக இளமையும் இல்லாத நடுத்தர நிலையில் உள்ளவற்றைத் தேர்வுசெய்து நரம்பு நீக்கித் தேவையான அளவு வெட்டியெடுத்து ஒத்த அளவாக ஓலைகள் சுவடியாக ஒன்றுசேர்க்கப்படும். பனை ஓலையின் மேற்பறப்பு கடினமாக இருக்கும். எனவே பதப்படுத்துவதற்காக நிழலில் உலர்த்தப்பட்டு, பனியில் போட்டு பதப்படுத்தப்பட்டு, வெந்நீரில் போட்டு வெதுப்பி எடுக்கப்பட்டு, சேற்றில் புதைத்தும் பல்வேறு முறைகளைக் கையாண்டு உருவாக்கப்படும்.
பக்குவப்படுத்தப்பெற்ற ஓலைகள் ஈரமின்றி காய்ந்தபின்னர் கனமான சங்கு அல்லது வழுவழுப்பான கல் கொண்டு தேய்த்து ஏட்டிற்குப் பலபலப்பு ஏற்படுத்தப்பெறும். மேலும் ஏடு தகடுபோல் நேராக ஆகிவிடும். “ஓலைகளின் மேற்பரப்பு மிருதுவானதுடன் அதில் உள்ள லிக்னின் என்ற பொருள் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஓலைகள் விரைவில் சிதிலமடைவதில்லை. ஒரிஸாவில் பாதுகாப்பிற்காக மஞ்சள் நீர் அல்லது அரிசிக்கஞ்சியில் அரைமணிநேரம் ஊரவைத்து பதப்படுத்தினர் (ப.பெருமாள், சுவடிச்சுடர் ப.429). இவ்வாரெல்லாமல் பல பணிகளைச் செய்து இலக்கியங்களை அந்நாளில் பதிவுசெய்துள்ளனர்.
இன்றளவில் தமிழர் நாகரிகம், பன்பாடு, இலக்கியம், வரலாறு ஆகியவற்றைக் காத்த கருவூலங்களுக்கு பெற்றோர்களாகப் பனைமரங்கள் இருந்துள்ளன. அவை வெறும் மரங்கள் அல்ல. தமிழ்ப் பன்பாட்டின் அடையாளங்கள்.
பாரி மகளிர் அங்கவை, சங்கவை - மலைமான் மகன் தேவகன் திருமணத்திற்கு வந்த மூவேந்தர்களும் உண்ணுவதற்குப் பனம்பழம் வேண்டுமென்று கேட்க : அதைக்கேட்டு வெளியில் வந்த ஒளவை மனப்பந்தலில் வெட்டிப்போட்டிருந்த பனைமரத்தைப் பார்த்து
“திங்கட் குடையுடை சேரனும், சோழனும், பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்துநின்றார், மனப் பந்தலிலே
சங்கொக்க வெண்குருத்து ஈன்று, பச்சோலை சல சலத்து
நுங்குக்கண் முற்றி, அடிக்கண் கருத்து, நுனி சிவந்து
பங்குக்கு மூன்று பலன்தரவேண்டும் பனந்துண்டமே!”|
(ஒளவையாரின் தனிப்பாடற் றிரட்டு-31)
என்ற பாடலைப் பாட பனந்துண்டம் முளைத்து வளர்ந்து உடன் பனம்பழம் தந்தது என்று பாடியுள்ளார்.
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக்
கொள்வார் பயன்தெரி வார்’| (திருக்குறள் - 104)
என்று நன்றியின் அடையாளக் குறியீடாக வள்ளுவர் பயன்படுத்தியுள்ளது புலனாகிறது. மேலும் பழந்தமிழ் நூலான தலவிலாசம் பனையின் 801 பயன்களைக் கூறுகின்றது.
தமிழகத்தில் ஊரகத்தெய்வக் கோயில்களில் பெரும்பாலானவை பனைமரத்தின் அடியில் அமைந்துள்ளன. கோயில் காடுகளில் பெரும்பாலானவை பனங்காடுகளாகக் காணப்பெறுகின்றன. தமிழர் வழிபாட்டு முறைகளில் இம்மரங்கள் காணப்பெறும் இடங்களிலெல்லாம் கருப்பனசாமி வழிபாடு இருந்ததாகக் கூறப்பெறுகிறது.
தமிழகக் கோயில்கலை வரலாற்றில் பல கோயில்களில் பனைமரம் தலமரமாக வழிபடுப்பெற்று வருகிறது. திருப்பானந்தாள் அருள்மிகு பெரியநாயகி உடனுறை செஞ்சடையப்பர் திருக்கோயில், திருப்புறவார் பனங்காட்டூர் அருள்மிகு சத்தியாம்பிகை உடனுறை பனங்காட்டீசர் திருக்கோயில், திருப்பனையூர் அருள்மிகு பெரியநாயகி உடனுறை அழகியநாதர் திருக்கோயில், திருமழபாடி அருள்மிகு அழகம்மை உடனுறை வைத்தியநாதர் திருக்கோயில், திருவோத்தூ (செய்யாறு) அருள்மிகு இளமுலைநாயகி உடனுறை வேதநாதர் திருக்கோயில், திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு) அருள்மிகு அமிர்தவல்லி உடனுறை தாலபுரீசுவரர் திருக்கோயில் ஆகிய சிவதலங்களில் பனைமரம் தலமரமாக வணங்கப்படுகிறது. இக்கோயில்கள் தேவராப்பாடல்களால் போற்றப்பட்டவை. மேலும் இத்திருக்கோயில்களில் பிரமன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர், சூரியர், சந்திரர், ஆதிசேசன், நாகக்கன்னி, தடாகை, குங்கிலியகலய நாயனார், சிபிச்சக்கரவர்த்தி, சப்தரிசிகள், அத்ரி, பிருகு, பராசரமுனிவர், மகாலெட்சுமி, கரிகாற்சோழன், நந்திதேவர், இலக்குமி, மார்க்கண்டேயர், புருஷாமிருகரிஷி, தொண்டைமான் ஆகியோர் பனைமரங்களை வழிபட்டதாகத் தலங்களின் வரலாறுகள் தெரிவிக்கின்றன.
மூவேந்தர்களில் சேரர்களின் சின்னம் பனை. வேளாண்மைக் கடவுளாகப் போற்றப்படும் பலராமன் பனைமரக்கொடி கொண்டவன். மேலும் கன்னனின் அண்ணன் பலதேவனும், சேரமன்னர்களும் பனம்பூவைச் சூடியுள்ளனர். கம்போடியாவில் தேசிய மரவடைச் சின்னமாகவும், தமிழகத்தின் தேசிய மரமாகவும் பனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.